கடந்த சில ஆண்டுகளாகவே வங்கிகள் தனித்தனியாக தங்களுக்குத் தேவைப்படும் பணியாளர்களை போட்டித் தேர்வுகள் நடத்தி எடுத்துக் கொள்கின்றன.
எண்ணற்ற காலியிடங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 7 முதல் 8 ஆண்டுகளாக பட்டப்படிப்பு முடித்துக் காத்திருப்பவர்கள் கூட கடந்த சில
ஆண்டுகளில் வங்கிகள், ரயில்வே, மத்திய அரசுத் துறைகள் என பல வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். இவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் தாங்களாகவே போட்டித் தேர்வுக்குத் தயாராகுபவர்கள்.
எனினும் தனியாக தயார் செய்பவர்கள் அல்ல. ஒரு சிறு குழுவாக தினமும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் பயிற்சி மேற்கொள்பவர்கள் இவர்கள். மீதமுள்ளவர்கள் பெரிய நகரங்களில் செயல்படும் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து அடிப்படைகளை நன்றாக அறிந்து பின்பு தொடர்ந்து தாங்களாகவே பயிற்சி மேற்கொள்பவர்கள்.
உங்கள் ஊரில் இது போன்ற பயிற்சி நிறுவனங்கள் இருப்பது கடினமே. அதனால் நீங்களாகவே 2 அல்லது 3 நண்பர்களாக சேர்ந்து இத்தேர்வுகளுக்குத் தயாரானால் கட்டாயம் ஒரு ஆண்டுக்குள் போட்டித் தேர்வு மூலமாக வேலை ஒன்றில் சேர்ந்திட முடியும்.
அடிப்படைகளை நன்கு அறிவதற்குத் தான் பயிற்சி நிறுவனங்கள் பெரிதும் உதவுகின்றன. மேலும் தேர்வு பற்றிய பல நுணுக்கங்களையும் இவை கற்றுத் தருகின்றன. எனவே நீங்களாகவே தயாராகும் போது உத்திகளை ஏற்கனவே தேர்வுகளில் வெற்றி பெற்றவர் மூலமாக அறிந்து அதற்கேற்ப தயாராக வேண்டும். தானாகவே படித்து வெற்றி பெறுவது முடியாதது ஒன்றுமல்ல. எனினும் அதில் தெளிவான திட்டமிடல், போதிய பயிற்சி மற்றும் விடாமுயற்சி ஆகியவை அவசியம்.